Thursday, May 13, 2010

ஈழ மக்களின் இன்றைய தேவை...

A good write-up on the position of Tamils in Sri Lanka:

http://blog.tamilsasi.com/2010/05/blog-post_13.html,
reproduced here:


மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அர‌சிய‌ல் த‌லைமை எதுவும் இல்லாமல், எந்த‌ நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழ‌ப்பான‌ சூழ்நிலையிலே த‌மிழ் ம‌க்க‌ளை விட்டுச் சென்றிருக்கிறார்க‌ள் தமிழீழ விடுத‌லைப் புலிக‌ள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒன்றாக தெரிந்த ஈழத்தமிழினம் இன்றைக்கு பல்வேறு துண்டுகளாக தெரிகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிர‌பாகரன் போன்ற‌ ஆளுமை மிக்க‌ த‌லைவ‌ர்க‌ளின் திடீர் மறைவும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையும் குழ‌ப்ப‌ங்க‌ளையே ஏற்படுத்தும். அது தான் தற்பொழுது ந‌ட‌ந்தேறி வ‌ருகிற‌து. அடுத்த‌ த‌லைமையைக் கைப்ப‌ற்ற‌ ந‌ட‌க்கும் போட்டி, ப‌ல்வேறு குழுக்க‌ளுக்குள் ந‌ட‌க்கும் மோத‌ல்க‌ள் என‌ குழ‌ப்ப‌மான‌ சூழ்நிலையே தற்பொழுது உள்ள‌து. தற்பொழுது ந‌ட‌ந்துக் கொண்டிருக்கின்ற‌ எந்த‌ நிகழ்வும் தமிழர்களுக்கு ந‌ம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஒரு மோச‌மான‌ கால‌க்க‌ட்ட‌த்திலே த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறோம். ஒரு வலுவான தலைவனை இழக்கும் ஒரு சமூகம் இப்படியான ஒரு சூழ்நிலையையே எதிர்கொண்டு வந்துள்ளதை பல்வேறு வரலாறுகளில் கண்டுள்ளோம். அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்.


ஈழ‌த்திலே இன்ன‌மும் சுமார் ஒரு ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் த‌டுப்பு முகாம்க‌ளில் உள்ள‌ன‌ர். போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிக் காரணமாக மக்களை இன்னமும் முகாம்களில் வைத்திருக்க வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. அது தான் காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. தமிழர் பகுதியில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள-புத்த மயமாக்கம் போன்றவை தமிழர்கள் நிலங்களைக் களவு கொண்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் கிழக்குப் பகுதியில் நடந்த குடியேற்றங்கள் போலவே தற்பொழுது கிளிநொச்சியிலும் குடியேற்றங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் நிலம் எங்கும் சிங்கள இராணுவ முகாம்கள் நிறைந்து உள்ளன. இந்திய வியாபாரிகளும், முதலாளிகளும் ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளனர். நெல் விளையும் மன்னாரின் விளை நிலங்களை வர்த்தகமயமாக்கும் போக்கும் நடந்து வருவதாக செய்திகளில் காண முடிகிறது.


தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களில் பிற இடங்களில் உறவினர்களை உடையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். ஆனால் எந்த உறவும் அற்ற மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கின்றனர். ஈழத்தின் போரை தங்களின் தலையில் சுமந்து போராடிய வன்னி மக்களை தங்கள் உறவினர்களாக்கிக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தோ, திருகோணமலையில் இருந்தோ, மட்டக்களப்பில் இருந்தோ, ஈழ மக்களின் போராட்டத்தை தாங்களே இனி சுமக்கப் போவதாக கூறும் வெளிநாட்டில் இருந்தோ இன்னமும் யாரும் முன்வாராதது வேதனையான சூழ்நிலையே ஆகும். த‌டுப்பு முகாம்க‌ளை விட்டு வெளியே வ‌ந்த‌ ம‌க்க‌ளுக்குச் ச‌ரியான‌ வாழ்வியில் தேவைகள் இன்னும் கிடைக்காத சூழ்நிலையே உள்ள‌து. போரில் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளை, பெற்றோர்க‌ளை, குழ‌ந்தைக‌ளை இழ‌ந்து த‌விக்கும் இம் ம‌க்க‌ளுக்கு கூடுதல் பிரச்சனையாக த‌ற்பொழுது வாழ்விய‌ல் பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ளும் அவ‌ல‌மான‌ சூழ்நிலையே உள்ளது.

ஈழ‌ ம‌க்க‌ளின் போராட்டத்தை இனி தாங்க‌ளே சும‌க்க‌ப் போவ‌தாக‌ கூறும் வெளிநாடுத்த‌மிழ‌ர்க‌ளோ, அதிகார‌த்தைக் கைப்ப‌ற்றும் போட்டியில் பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர். நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் உருத்திரகுமார் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்தை உருவாக்கும் முய‌ற்சியிலே இருக்கின்ற‌ன‌ர். ம‌ற்றொரு குழு நார்வேயைச் சேர்ந்த‌ நெடிய‌வ‌ன் த‌லைமையில் ம‌றுப‌டியும் ஆயுத‌ப் போராட்ட‌த்தை முன்னெடுக்கும் முய‌ற்சிக‌ளை செய்வ‌தாக‌க் கூற‌ப்ப‌டுகிற‌து. இரு வார‌ங்க‌ளுக்கு முன்பு மே முதல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான‌ தேர்தல் அமெரிக்கா, க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்தேறிய‌து. எதிர்பார்த்த அளவுக்கு பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பு இந்த‌ தேர்த‌லில் இருந்த‌தாக‌ தெரிய‌வில்லை.
ஆனால் ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ப‌ல்வேறு குழ‌ப்ப‌ங்க‌ளும், குள‌றுப‌டிக‌ளும் ந‌ட‌ந்தேறி இருப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறி வருகிறது. புதின‌ம் இணைய‌த்த‌ள‌மோ த‌மிழ்நெட் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாக‌ கூறுகிற‌து. புதின‌ம் உருத்திர‌குமார் அமைக்கும் நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தை ஆத‌ரிக்கிற‌து. தமிழ்நெட் இணையத்தளம் நெடியவன் தலைமையிலான குழுவை முன்னிறுத்துகிறது. ஒரு வருடம் முன்பு ஆங்கில‌த்தில் த‌மிழ்நெட், த‌மிழில் புதின‌ம் என‌ ஈழ‌த்தில் ந‌டைபெறும் செய்திக‌ளை த‌மிழ‌ர்க‌ளின் பார்வைக்கு ஒரே மாதிரியாக‌ கொடுத்து‌ வ‌ந்த‌ செய்தித்த‌ள‌ங்க‌ள் இன்று இரு வேறு குழுக்க‌ளை பிர‌திப‌லிக்கும் த‌ள‌ங்க‌ளாக‌ மாறிப் போன‌து தற்போதைய தமிழர்களின் வேத‌னையான‌ சூழ்நிலையை நினைவுப‌டுத்திக் கொண்டிருக்கிற‌து.


இன்னொரு புற‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ சிறீலங்கா தேர்த‌லில் ராஜ‌ப‌க்சே த‌ன்னுடைய‌ அதிகார‌த்தை ”வலுவாக” நிலை நாட்டி இருக்கின்றார். ஆனால் ஈழத்தில் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் தேர்த‌லைப் புற‌க்க‌ணித்து உள்ள‌ன‌ர். அவ்வாறான சூழ்நிலையிலும் த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு அதிக‌ இட‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றி இருக்கிறது - 13 இடங்கள். புலிக‌ள் இருந்த‌ கால‌த்திலே இவ‌ர்க‌ள் கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ள் 22. அத‌னுட‌ன் ஒப்பிடும் பொழுது இது குறைவான‌து தான் என்றாலும் இது ஒரு குறிப்பிட‌த்த‌க்க‌ வெற்றியாகும். என்றாலும் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் இந்த‌ வாக்குப்ப‌திவை புற‌க்க‌ணித்து த‌ங்க‌ள் ந‌ம்பிக்கையின்மையையே வெளிப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர். என‌வே த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு மீதும் ம‌க்க‌ளுக்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை என்ப‌தையே இந்தப்‌ புற‌க்க‌ணிப்பு தெளிவுப‌டுத்துகிற‌து.த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் ப‌ல்வேறு பிள‌வுக‌ளை எதிர்கொண்டே இந்த தேர்த‌லை ச‌ந்தித்த‌து. த‌னித் த‌மிழீழ‌ம் என்ற‌ கோரிக்கையை கைவிடுவ‌தாக‌வும் ச‌ம்ப‌ந்த‌ம் அறிவித்து இருந்தார்.

த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பை வெளிநாட்டில் உள்ள‌ த‌மிழ‌ர் குழுக்க‌ள் ஏற்றுக் கொள்ள‌வில்லை. ஈழ‌த்தில் உள்ள‌ ப‌ல்வேறு த‌மிழ‌ர் அமைப்புக‌ளும் வெளிநாட்டில் இருந்து முன்வைக்க‌ப்ப‌டும் எதையும் ஏற்றுக் கொள்வ‌தில்லை என்ற‌ முர‌ண்ப‌ட்ட‌ச் சூழ்நிலையே த‌ற்பொழுது உள்ள‌து. வ‌லைப்ப‌திவுக‌ளிலும், எழுத்துல‌கிலும் உள்ள‌ ஈழ‌த்து அறிவுஜீவிக‌ளும் இது வ‌ரை எதையும் உருப்ப‌டியாக‌ முன்வைத்தாக‌ தெரிய‌வில்லை. (அல்லது அனைத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த நான் அத‌னை வாசித்திருக்க‌வில்லை)

******************

போராட்ட‌ம் என்ப‌து வெற்றி அல்ல‌து தோல்வி குறித்தான‌து அல்ல என்பதையே ஈழம் என‌க்குக் க‌ற்றுக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை, போராட்ட‌ம் என்ப‌து போராடும் இருப்பை தொட‌ர்ந்து த‌க்க‌வைத்துக் கொள்வ‌தே ஆகும். போராட்டம் என்பது மிகவும் நெடியது. வெற்றிகளும், தோல்விகளும் இந்தப் போராட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நேரக்கூடிய நிகழ்வுகளே ஆகும். தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.

Protracted People's war என்று சொல்லப்படுகின்ற மிக நீண்ட மக்கள் யுத்தத்தை மாவோ வலியுறுத்துகிறார். புலிகளின் 30 ஆண்டு காலப் போராட்டமும் மிக நெடிய போராட்டம் தான். பல வெற்றி, தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த இயக்கம் தான் புலிகள் இயக்கம். மிக மோசமான தோல்விகளின் பொழுதும் புலிகள் தங்களின் போராடும் இருப்பை தக்கவைத்துக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்களால் தோல்விகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர முடிந்தது. ஆனால் 30 ஆண்டு கால நெடிய போராட்டத்தால் களைப்புற்ற புலிகள் தங்களின் ஒட்டு மொத்த போராட்ட களத்தையே வெற்றியை நோக்கி குறிவைத்தனர். வெற்றியா அல்லது தோல்வியா என்ற இரண்டு நிலைக்குள் போராட்டம் என்ற இருப்பு பறிபோனது. வெற்றி கிடைக்காமல் தோல்வி அடைந்த பொழுது போராட்டக் க‌ள‌ம் பறி போன‌து.


இன்றைக்கும் போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் உள்ளது. சிங்கள இனவெறி முன் எப்பொழுதும் இல்லாத உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நாம் போராடுவதற்கான களம் தான் இல்லாமல் போனது. அது தான் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. நான் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. தமிழ் மக்களுக்காக செயல் திறனுடன் போராடிய இயக்கம் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இருந்த வரை தமிழ் மக்களை இந்த உலகம் நோக்கியப் பார்வையும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உலகம் தமிழர்களை அணுகும் முறையையும் கவனிக்கும் பொழுது புலிகள் தமிழர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் நமக்கு தெளிவாகிறது. இறுதிக் காலத்தில் தமிழர்களை தடுத்து வைத்தது போன்ற குற்றங்களை புலிகள் புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கட்டி எழுப்பிய வகையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது நமக்கு இன்னமும் மதிப்பு அதிகமாகிறது.

அதே நேரத்தில் புலிகளின் முழுமையான இராணுவ அணுகுமுறை நம்முடைய அரசியல் வெளியை சிதைத்தும் வந்துள்ளது. போராட்டம் என்பது மக்களின் போராட்டமாக இருக்க வேண்டும். ஈழப் போராட்டம் என்பது புலிகளின் போராட்டம் என்பதாக இருந்ததே தவிர மக்களின் போராட்டம் என்பதாக இருக்கவில்லை. போராளிகள் தங்களை மக்களின் ஒரு அங்கமாக எண்ணாமல் ஒரு அதிகாரமையமாகவே தங்களை கட்டமைத்துக் கொண்டனர். அதிகாரமையங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே போகும். ஈழப் போராட்டமும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனது.

மிக நெடியப் போராட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகவும் அவசியமாகிறது. ஒரு தலைமுறை தங்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு கொடையாக போராட்டத்தை கொண்டுச் செல்ல முடியாது. அதைத் தான் ஈழப் போராட்டம் செய்தது. தொடர்ச்சியான போர் மக்களை தங்கள் வாழ்வியலை இழக்கச் செய்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத மக்கள் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையை போராட்டக் களம் ஏற்படுத்தியது. வன்னியில் உள்ள மக்கள் ஆர்ட்டலரியிலும், பிற ஆயுதங்களாலும் பலியான பொழுதும் அது அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக செய்யும் தியாகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாதங்களை பல ஈழத்தமிழர்கள் முன்வைத்திருந்தனர். போராடும் வலுவை சிதைக்கவே சிங்கள இரணுவம் அடிப்பதாகவும், அதனை எதிர்த்தே போராட வேண்டி இருப்பதாகவும் பல நண்பர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இதை விட அபத்தமான சித்தாந்தம் எதுவும் இல்லை. தற்போதைய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவது என்பது கால ஓட்டத்தின் நியாதிகளின் படி அபத்தமானது. தற்கால மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பது எந்த வகையிலும் அறமான செயலாகாது. எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.

******

தற்பொழுது போராட்டக் களத்தையே நாம் இழந்திருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தை மீள் அமைப்பது என்பது களநிலையையே பொறுத்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்கள் போராட தொடங்கினால் போராட்டம் தொடங்கும். அவ்வாறு இல்லாமல் நார்வேயிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் இருந்து வீக்கெண்டில் தொடங்குவது போராட்டமாகாது. புலிகளின் சொத்துக்கள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் அந்த சொத்துக்களைக் கையப்படுத்த நடக்கும் சண்டையின் உச்சமே இன்று வெளிநாட்டுச் சார்ந்த போராட்டமாக உள்ள நிலையில் அந்தப் போராட்டத்தை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கிறோம்.

இந்த உலகு ஒழுங்கு என்பது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதே. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு அது அந்த சாம்ராஜ்யம் உருவான இடத்திலேயே சுருங்கி விட்டது. சோவியத் யூனியன் என்ற தேசம் மிகவும் பலமான வலுவான தேசமாக இருந்தது. இன்றைக்கு அது சுருங்கி விட்டது. நிரந்தரமாக வலுவான தேசம் என்பது எதுவும் இல்லை. அது காலவெள்ளத்திலும், ஓட்டத்திலும் மறையக்கூடியதே. புதிய தேசங்கள் உருவாவதும் நிகழக்கூடியதே. அதே நேரத்தில் அதற்கான நெடியப் போராட்டம் மக்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் போராட்டம் மக்களை உள்ளடக்கியது. மக்களின் உரிமைகளைச் சார்ந்தது. தனி நாடு என்பது மட்டுமே நம்முடைய இலக்கு அல்ல. மக்களின் உரிமைகளே நமக்கு முக்கியமானது. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியல் தேவைகளே.

தற்போதைய தலைமுறை பல ஆண்டுகளாக நடந்தப் போரில் பலவீனமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டத்திற்கான களம் நமக்கு இல்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலை ஆகும். இன்றைய சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் தேவைகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்கைக்குரிய சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைய நாம் வழிவகுக்க வேண்டுமே தவிர நம்முடைய தனிநாட்டுக் கனவுகளை அம் மக்கள் மீது திணித்தல் என்பது எவ்வகையிலும் சரியானது அல்ல.

No comments:

Post a Comment