Tuesday, April 27, 2010

பழங்குடியினர்: சில கேள்விகள்?

பழங்குடியினரை மேம்படுத்தவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.

ஆனால், அது சார்ந்த சில வினாக்களுக்கு பதில்களில் ஒருமித்த கருத்து இல்லை:
அவை:
௧. காடுகளில் சாலைகள் அமைக்காமல், பிற கட்டுமான வசதிகளை உண்டாக்காமல், அவர்களுக்கு விஞ்ஞானத்தின் வசதிகளை எவ்வாறு செய்ய முடியும்? அவர்களுக்கு சுகாதார மனைகள், தொலைபேசி, தொலை காட்சி, வேண்டுமாவேண்டாமா?
௨. சாலைகள் போடுவதற்கு, பழங்குடியினர் அல்லாதவர்கள் அங்கு வர வேண்டும்; தங்க வேண்டும்; பின், தம் இடத்திலேயே தாம் அன்னியர்கள் ஆகி விட்டதாக புகார் செய்யாமல்இருப்பாரா?
௩. அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டுமா இல்லையா? ஆம் என்றால் எந்த அளவுக்கு? அவர்களுக்கு "நவீன கல்வி" அளித்தால், அவர்களை இயற்கையை ஒட்டிய அவர்தம் வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, நகர வாழ்க்கை முறைக்கு மாற மூளை சலவை செய்வதாகஆகாதா?
௪. சரி, அவர்களுக்கு கல்வி அளிக்கவே வேண்டாம் என்றால், அவர்களுக்கு, அரசியல் சட்டத்திலே அளிக்கப் பட்ட ஒதுக்கீடு முறையின் பலன்கள் எவ்வாறுகிடைக்கும்?
௫. நவீன கல்வி இல்லாமல், அவர்கள் இவ்வாறே காலம் காலமாக இருப்பார் என்றால், அதிலும் சில பிரச்னைகள் உண்டு: அவர்களின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு சரியான வாழ்வு ஆதாரங்கள் அங்கேயே - அந்த காட்டு பகுதியிலேயே - தொடர்ந்து கிடைக்குமா? (உதாரணத்துக்கு, தேன், கிழங்குகள், கொட்டைகள், தோலுக்கு வேண்டிய விலங்குகள்) ,
மேலும், அவர்கள், சிறு கூட்டத்தில் உள்ளேயே திருமணம் செய்து இனத்தை பெருக்கினால், consanginous திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் பிணியுடனும், ஊனங்களுடனும் பிறக்கும். . நீண்ட கால நன்மைக்காக அவர்கள், காலப்போக்கில் பொது சமுதாயத்துடன் ஒன்றிப் போவது தான் நலம் பயக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லுவது சரியா?

௬. அவர்களை அங்கேயே இருக்க விட்டால், அவர்கள் வாழும் வனத்தில், நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் - கலப்பைக்கும், வண்டி சக்கரத்துக்கும் தேவையான இரும்பு, சாதம் பரிமாறும் கரண்டி செய்ய அலுமினியம், நாட்டுக்கு, ஏன், அவர்கள் தெருவுக்கு போட வேண்டிய விளக்குக்கான மின்சாரம் உற்பத்தி செய்ய கரி - முதலியவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சரியா?
௭. சுதந்திரம் பெற்றதற்கு பின் சிற்சில பழங்குடியினர் கல்வியில் தேறி உள்ளனர்; ஒதுக்கீடு முறையிலோ, அல்லது இல்லாமலோ, பட்டதாரிகள், அதிகாரிகள் , பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகி உள்ளனர்; வக்கீல்கள் உள்ளனர்; அவர்கள், தம் இனத்து பழங்குடியினர் வருங்காலத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என ஏதேனும் கருத்து வைத்திருக்கிறார்களா? அர்ஜுன் முண்டாவும், சிபு சொரேனும், தம் பழங்குடி இனத்தை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல விழைகிறார்கள்?
௮. இது போல எல்லா மாநிலங்களிலும், சட்ட சபைக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீடு உள்ளது; ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அமைச்சரவையில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் தம்வாக்கு வங்கியை பாது காத்து கொள்ளும் அளவுக்கு, அவர்கள் வருங்காலம் பற்றிய எதாவது திட்டங்களை முன் மொழிகிறார்களா?

இவை எலாம், ஏதோ பழங்குடியினரை மடக்க வேண்டும் என்று எழுப்பும் வினாக்கள் இல்லை; இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அவர்கள் முன்னேற்றத்தில் நம் பங்கு ஆற்ற வேண்டும் என எண்ணும் ஒவ்வொரு இந்தியன் மனதில் எழும்வினாக்களே.

உங்களைப் போன்ற வலையுலக அன்பர்கள் கருத்து கூறுங்கள்; பல நூறு கருத்துகள் வந்தால் அவற்றில் சில நூறு செயல் படுத்த முடியும்.
இதை படிக்கும் ஒவ்வொரு அன்பரும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment